Thursday, August 11, 2016

வீட்டிற்கான வழியிலொரு மூதாட்டியும், சிறுவனும் !



       எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை எந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கண்ட மனிதனொருவனும், காணத் துடிக்கும் மனிதனொருவனும் எக் கட்டத்தில் ஒன்றாக இணைகிறார்கள்? எது அவர்களிடையே ஒரு ஒற்றுமையாகக் காணப்படுகிறது? எது அவர்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரியும்போது வலியை ஏற்படுத்துகிறது? போன்ற கேள்விகளை நம்மிடம் விட்டுவிட்டு முடிகிறது 'ஜிபோரோ (The Way Home - வீட்டிற்கான வழியில்)' எனும் கொரிய தேசத்துத் திரைப்படம்.
  
        நகரத்திலிருந்து புறப்பட்டு ஒடுங்கி வளைந்து செல்லும் ஒரு மலைப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் பேரூந்தினுள்ளே கதாநாயகனான ஏழு வயதுச் சிறுவனும் அவனது தாயும் அமர்ந்து உரையாடும் காட்சியினூடு திரைப்படம் தொடங்குகிறது. நகரத்திலேயே பிறந்து வளர்ந்த சிறுவன், தான் முதன்முதலாக சந்திக்கப் போகும் தனது கிராமத்து அம்மம்மா பற்றி தாயிடம் கேட்கிறான். அவள் செவிடா, ஊமையா, பயங்கரவாதியா போன்ற கேள்விகள் அவனது மனதுக்குள்ளே சஞ்சலப்படுத்திக் கொண்டிருக்க அவற்றையே தாயிடம் வினவுகிறான். அவள் பதிலளிப்பதில்லை. பேரூந்தினுள்ளே அக் கிராமத்து பாமர மக்களின் வளர்ப்புப் பிராணிகளோடு அவர்களது உரையாடல்களும் கூட சிறுவனுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அவன் எப்போதும் தனது கையடக்க விளையாட்டுக் கருவியை இயக்கி விளையாடிக் கொண்டேயிருக்கிறான்.

          நகரங்களில் தனிமைப்படுத்தப்படும் சிறுவர்களுக்கென பெரும்பாலும் விளையாட்டுக் கருவிகளே பொழுதுபோக்கச் செய்யும் முக்கிய சாதனங்களாக அமைகின்றன. ஓடி விளையாடவென வெளியில் செல்ல அனுமதியில்லை. வீட்டுக்குள்ளேயும், ஒரு அறைக்குள்ளேயும் முடங்கச் செய்யப்படும் சிறுவர்கள் தமது இழப்புக்களுக்கு வடிகாலாக விளையாட்டுப் பொருட்களிடமும் தொலைக்காட்சி, கணினி விளையாட்டுக்களிடமும் சரணடைந்து விடுகின்றனர். அவர்களது தனித்த வாழ்வில் அன்பைக் காட்டவோ, அன்பைப் பற்றிப் போதிக்கவோ எவரும், எதுவும் இருப்பதில்லை. இவ்வாறான நிலையில் விளையாட்டுப் பொருட்களிடமும், கடைகளில் வாங்கும் துரித உணவுகளிலும் தனித்து வாழ்ந்த சிறுவனொருவன், தனது தாயின் தொழில் நிமித்தம் காரணமாக எந்த வசதிகளுமற்ற மலைக் கிராமமொன்றில் தனது பாட்டியுடன் ஒரு மாத காலம் ஒன்றாகத் தங்க நேர்ந்தால் என்னவாகுமென்பதை மிகவும் உணர்வுபூர்வமாகச் சொல்கிறது திரைப்படம்.

          மலைக் கிராமத்தின் ஒரேயொரு பேருந்துத் தரிப்பிடத்தில் தாயையும், மகனையும் இறக்கிவிட்டுச் செல்லும் சிறிய ரக பேரூந்து நகர்ந்ததும் அக் கிராமம் பிடிக்கவில்லையென மகன் தாயுடன் வர மறுக்கிறான். தாய் அவனை அடித்து அழைத்துச் செல்கிறாள். நூலான்படைகள் தொங்கி, பூச்சிகள் ஊர்ந்து திரியும், உடைந்து விழ அண்மித்திருக்கும் பாட்டியின் குடிசை சிறுவனுக்கு அறுவெறுப்பூட்டுகிறது. அவன் பாட்டியின் கிழிந்திருக்கும் ஒரேயொரு பாதணியில் சிறுநீர் கழிப்பதன் மூலம் தனது வெறுப்பினை வெளிப்படுத்துகிறான். வாயோரங்களில் சுருக்கத்தோடு, அனுபவங்கள் கண்டு வாடி உலர்ந்து போன பாட்டி அன்பாக தலையை தடவி விடுவதைக் கூட அவன் விரும்பவில்லை. முதியவளுக்கான சில பரிசுப் பொருட்களை மகள் எடுத்து வந்திருக்கிறாள். அத்தோடு தனது மகனுக்கான நொறுக்குத் தீனிகளையும், இனிப்புக்களையும் கூட அங்கு கொடுத்து விட்டு, மகள் அங்கிருந்து புறப்படுகிறாள். கூன் விழுந்த  ஊமைப் பாட்டியிடம் தனித்து விடப்படும் சிறுவன் என்னவாகிறான்?

          முதியவள் தன்னைத் தொடும் போதெல்லாம், கல்லை எடுத்து அடிக்க ஓங்கும் சிறுவன், அவளை செவிடு, ஊமையெனவும் திட்டுகிறான். அவள் உணவாகக் கொடுப்பவற்றை உதாசீனம் செய்துவிட்டு தனது தாய் விட்டுச் சென்ற நொறுக்குத் தீனிகளையே உணவாகக் கொள்கிறான். தனது வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த விளையாட்டுப் பொருட்களோடு விளையாடி அலுத்துப் போன சிறுவன் ஊர் பார்த்துவரச் செல்கிறான். அம் மலைக் கிராமம் எந்தவொரு சுவாரஸ்யத்தையும் அவனில் ஏற்படுத்தவில்லை. சுற்றி வர ஓரிரு ஒற்றையடிப் பாதைகளோடு எங்கும் பழமையும், பூரணமுமற்ற குடிசை வீடுகளே இருக்கின்றன. அவன் சலிப்புறுகிறான்.

          சிறுவர்களது உள்ளங்கள் மிகவும் விசித்திரமானவை. அவை வித்தியாசங்களையும் மாற்றங்களையும் எளிதில் உணர்பவை. பல விடயங்களில் அவர்களுக்கு ஏற்படும் ஐயங்கள் அவர்களைத் தேட வைத்து தெளிவுபடச் செய்கின்றன. தொந்தரவெனச் சொன்னபடியே பாட்டி தையல் வேலைக்குப் பயன்படுத்தும் கையூசிக்கு நூல் கோர்த்துக் கொடுக்கும் சிறுவன், கரப்பான் பூச்சியைக் கண்டு அலறுகிறான். பாட்டி எந்தவித பூச்சிகொல்லிகளினதும் உதவியற்று சர்வ சாதாரணமாக அதனைப் பிடித்து வெளியே எறியும்போது ஆச்சரியமுறுகிறான். அவன், தனது ஒரே பொழுதுபோக்கு விளையாட்டுக் கருவியின் பேட்டரிகள் தீர்ந்துபோனதும் திகைத்துப் போகிறான். பேட்டரி கேட்டும், அதற்கான பணம் கேட்டும் பாட்டியிடம் சண்டை போடுகிறான். கோபத்தில் பாட்டியின் பொருட்களை உடைக்கிறான். பாதணிகளை ஒளித்து வைக்கிறான். தன்னாலியன்ற கொடுமைகளை பாட்டிக்குச் செய்கிறான்.

          பாட்டி உறங்கும்போது அவளது கொண்டையில் முடிந்திருக்கும் ஒரு கொண்டை ஊசியைத் திருடும் சிறுவன், அதனை எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடுகிறான். கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரேயொரு கடையில் அவனுக்கான பேட்டரிகள் இல்லை. அக் கடைக்குச் சொந்தக்காரி, நகரத்துக்குச் செல்லும் வழியைக் காட்டிக் கொடுக்கிறாள். நகரத்திலும் அவனது விளையாட்டுக் கருவிக்குப் பொருத்தமான பேட்டரிகள் இல்லை. ஏமாற்றத்தோடு கிராமத்துக்கு வரும் சிறுவன் பாதை தவறித் திணறி விசும்புகிறான்.

          பாட்டியின் அன்பு மொழிகளற்றது. அவளது பொறுமையும் எல்லையற்றது. அவள் சைகைகளாலேயே எல்லாவற்றையும் கேட்கிறாள். தன்னைத் தொடக் கூட விடாத சிறுவனிடம் உணவாக என்ன வேண்டுமென அவள் வினவும்போது அவன் 'பிட்ஸா, ஹம்பர்கர், கெந்துகி சிக்கன்' தனக்கு வேண்டுமெனக் கேட்கிறான். இவை எவை பற்றியும் அறியாத முதியவள் அவன் சொன்னதையும், சித்திரத்தில் காட்டியதையும் வைத்து, கிழங்குகளை விற்றுக் கிடைக்கும் பணத்தில் ஒரு கோழியை வாங்கி வந்து அவளுக்குத் தெரிந்த விதத்தில் சமைத்துக் கொடுக்கிறாள். அது, தான் கேட்ட 'கெந்துகி சிக்கன்' அல்லவெனக் கூறி சிறுவன் அழுகிறான். பின்னர் தனக்கெதுவும் வேண்டாமெனக் கூறிப் படுத்துக் கொள்ளும் சிறுவன், நள்ளிரவில் பசிக்க, எழுந்து அனைத்தையும் உண்கிறான். காலையிலெழுந்து பார்ப்பவன் பாட்டி, குளிர் காய்ச்சலால் நடுங்குவதைக் கண்டு தனது போர்வையை எடுத்துப் போர்த்தி விடுவதோடு, தான் திருடிய கொண்டை ஊசியை அவளது கொண்டையில் சூடி விடுகிறான். பின்னர் தனக்குத் தெரிந்த விதத்தில் அவளுக்கு உணவையும் பரிமாறுகிறான்.

          இவ்வளவு காலமும் தான் வெறுப்போடு பார்த்து வந்த பாட்டியின் மீது அன்பும் கருணையும் கொள்ளச் செய்தது எது? சிறுவன் பாட்டிக்குச் செய்த சங்கடங்கள் ஏராளமென்ற போதிலும், பாமரப் பாட்டியின் பொறுமை அவனுக்கு பல பாடங்களைக் கற்பித்திருக்கின்றன. அவை எந்தவொரு சர்வ கலாசாலைகளிலும் கற்பிக்கப்பட முடியாதவை. அனுபவமும், அமைதியும், பொறுமையும், தன்னலமற்ற சேவையும் மாத்திரமே கற்பிக்கக் கூடியவை.

          நகரத்துச் சந்தைக்கு சிறுவனை அழைத்துச் செல்லும் மூதாட்டி, தர்ப்பூசணிகளையும், கிழங்குகளையும் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சிறுவனுக்கு சப்பாத்துக்களையும், அவன் விரும்பிய உணவு வகைகளையும் வாங்கிக் கொடுக்கிறாள். தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் சிறுவனுக்காகச் செலவழித்த முதியவள், அவனை மட்டும் பேரூந்திலேற்றி கிராமத்துக்கு அனுப்பி விட்டு, மலைப்பாதை நெடுகவும் கூன் முதுகோடு நடந்து கிராமத்துக்கு வருகிறாள். கிராமத்துப் பேரூந்துத் தரிப்பிடத்தில் வந்திறங்கி பாட்டிக்காகக் காத்திருக்கும் சில மணித்தியாலங்களில் பாட்டியின்றிய தனிமையின் வலியை சிறுவன் வெகுவாக உணர்கிறான். பாட்டி விளையாட்டுக் கருவிக்கு பேட்டரிகள் வாங்குவதற்காக பணம் கொடுக்கும்போது அழுகிறான்.

        தன்னைத் திரும்பவும் நகரத்துக்கு அழைத்துச் செல்ல தான் வரப் போவதாக அவனது அம்மா அனுப்பிய கடிதம் கிடைத்ததும், அவன் கவலையடைகிறான். எழுதப் படிக்கத் தெரியாத மூதாட்டிக்காக தபாலட்டைகளில் அவன் பல கடிதங்களையும் சித்திரங்களையும் வரைந்து வைக்கிறான். பாட்டி சுகவீனமுற்றிருக்கும் போது எதனைத் தனக்கு அனுப்ப வேண்டும்? பாட்டி தன்னைப் பார்க்க விரும்பும்போது எதனை அனுப்ப வேண்டும் எனச் சொல்லிக் கொடுப்பதோடு அந்த எழுத்துக்களை எழுதவும் கற்பிக்கிறான். பாட்டிக்கு சுகவீனமென்றால் தான் உடனே விரைந்து வருவதாகவும் வாக்களிக்கிறான். பாட்டியைப் பிரியப் போவதையெண்ணி வேதனையுடன் அழும் அவன் நள்ளிரவில் எழுந்து பல ஊசிகளில் நூலைக் கோர்த்து அவளுக்காக வைக்கிறான். பிரியப் போகும் வேதனையில் இரவு முழுவதும் உறங்காதிருந்த சிறுவன், தன்னைக் கூட்டிச் செல்ல வரும் தாயுடன், மனம் நிறைய மிகுந்த வலியோடு புறப்படுகிறான். சிறுவன் கொடுத்த தனக்குப் ப்ரியமான பட அட்டையோடு தனித்துவிடப்படும் மூதாட்டி கிராமத்தின் இலையுதிர் மரங்களிடையே நடக்கும் காட்சியோடு நிறைவுறுகிறது திரைப்படம்.

         இத் திரைப்படத்தை எல்லா பாட்டிமார்களுக்கும் சமர்ப்பிப்பதாகக் கூறுகிறார் திரைப்படத்தின் இயக்குனர் 'லீ ஜ்யொங் ஹெயாங்'. 2002 ஆம் ஆண்டு கொரியாவில் வெளிவந்து பல சர்வதேச திரைப்படங்களில் பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளது இத் திரைப்படம். கொரிய திரைப்பட விழாக்களிலெல்லாம் வெற்றியைச் சூடி வந்த இத் திரைப்படம் இப் பெண் இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் பல பாராட்டுக்களையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது. அதிலும் சிறந்த திரைப்படத்துக்கும், சிறந்த திரைக்கதைக்குமான ஆஸ்கார் விருது இத் திரைப்படத்துக்குக் கிடைத்துள்ளமை குறிப்பிட்டுச் சொல்லக் கூடியது திரைப்படத்தின் கதாநாயகியாக மூதாட்டி 'கிம் எல் பூன்' நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட இல்லை எனினும் பார்ப்பவர்கள் அனைவரையும் தன் பக்கம் நடிப்பின் மூலம் ஈர்த்து விடுகிறார். சிறுவனாக நடித்திருக்கும் 'யு செங் ஹோ'வின் முதல் திரைப்படம் இதுதான். இத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக இச் சிறுவனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கிடைத்துள்ளது.

          சிறுவன் வழி தவறித் திணறி அழும்போது தனது சைக்கிளில் கூட்டிக் கொண்டு வந்து விடும் முதியவரும், சிறுவனை மாடு முட்ட வரும்போது முன்னே பாய்ந்து காப்பாற்றும் அயல் வீட்டுச் சிறுவனும், பாட்டியின் பேரனுக்காக சில இனிப்புக்களை இலவசமாகக் கொடுக்கும் ஒரு கிராமத்துப் பெண்ணும், தனது கிராமத்திலுள்ள ஒரு வயதான நோயாளிக்கு தனக்குக் கிடைத்த பெறுமதியான பரிசுப் பொருட்களையெல்லாம் அன்பளிப்பாகக் கொடுக்கும் பாட்டியும் கிராமத்து வெள்ளந்தித்தனத்தையும், பாசாங்கும் சுயநலமுமற்ற பாசத்தையும் பிரதிபலிக்கின்றனர்.

          திரைப்படமானது, அழகானதொரு கிராமத்தைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. அதன் பரப்புக்கள் குறுகியவை என்றபோதிலும், சிறந்த ஒளிப்பதிவானது, அக் கிராமத்தில் வாழ்ந்த அனுபவமொன்றை பார்வையாளர்களிடம் விட்டுச் செல்கிறது. படத்தில் அதிகளவு சம்பாஷணைகள் இல்லை. மௌனங்கள் பல கருத்துக்களை பார்வையாளர்களிடம் விதைத்து விடுகின்றன. அவை தெளிந்தவை. அவரவர் உணர்வுகளில் சலனங்களை ஏற்படுத்தாமல் வந்து செல்லும் பின்னணி இசையும், மலைக் கிராமத்தின் இயற்கை ஒலிகளும் மிக அருமையாகக் கோர்க்கப்பட்டிருக்கின்றன. 
மிகவும் தைரியமாக எழுபத்தைந்து வயது மூதாட்டியை கதாநாயகியாகவும், ஏழு வயதுச் சிறுவனை கதாநாயகனாகவும் நடிக்க வைத்து ஒரு காலப் பதிவைச் செய்திருக்கிறார் இயக்குனர்.


         திரைப்படத்தைப் பார்க்கும் அனைவரையும் இத் திரைப்படமானது தனது பால்ய காலங்களை மீட்டிப் பார்க்கச் செய்யும். குடும்பத்தில் மூத்தவர்களின் அரவணைப்பும், அன்பும் எப்போதுமே திகட்டாதவை. அவை சுயநலமற்றவை. எப்பொழுதும் யாசிக்கச் செய்பவை. எக் காலத்திலும் மனமெங்கும் வியாபித்து நிற்பவை. குழந்தைப் பருவத்தினருக்கு இந்த அன்பும், அரவணைப்பும் அயராது கிடைக்கும்போது அவை குழந்தைகளை நற்பிரஜைகளாக உருவாக்கிவிடும். இந் நவீன காலத்தில் நாம் இதனை இழந்துகொண்டிருக்கிறோம். மூத்தவர்களின் அன்பைப் புறக்கணித்து அல்லது அவர்களுடன் உறவாட நேரமற்று ஒதுங்கிச் செல்லும் நாகரீகப் போக்கு, வளரும் சந்ததியை வெகுவாகப் பாதிக்கிறது. அவ்வாறு தனித்து வளரும் குழந்தைகள் சுயநலத்தோடும், மனிதர்களைப் புறக்கணித்து நவீன கருவிகளோடு நேசம் கொள்ளும் போக்கும் தற்போது அதிகளவில் காணப்படுகிறது. நமக்குக் கிடைத்த இனிமையான பால்ய காலம் ஒருபோதும் எமது சந்ததிக்குக் கிடைக்கப் போவதில்லை. அவை மாற்றமுற்றுக் கொண்டேயிருக்கும். ஆனால் அன்பும், பாசப் பரிமாற்றங்களும், அரவணைப்புக்களும் ஒருபோதும் மாறாதவை. வற்றாதவோர் நீரூற்றைப் போல அவை குழந்தைகளுக்கு எப்பொழுதும் தொடர்ச்சியாகக் கிடைக்கச் செய்யவேண்டும். அது மாத்திரமே ஒவ்வொரு சந்ததியையும் அன்பினால் தலைநிமிரச் செய்யும்.

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com

நன்றி - ஆக்காட்டி, எதுவரை, பேசாமொழி, வல்லமை, பதிவுகள், காற்றுவெளி

Monday, August 1, 2016

நல்ல படைப்பாளிகள் பலர் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்


இலங்கையிலிருந்து வெளிவரும் 'எங்கள் தேசம்' எனும் சமூக, கலை, இலக்கிய இரு வார இதழில், கடந்த ஜூன் 15-30 அன்று பிரசுரமான எனது நேர்காணல் இது. நேர்காணல் செய்திருப்பவர் ஊடகவியலாளர் மற்றும் இலக்கியவாதியான திரு.நஸார் இஜாஸ்.

01.    
உங்களுடைய எழுத்துப் பணியின் பிரவேசம் பற்றி குறிப்பிடுங்கள்?
     அநேகரைப் போலவே அச்சு ஊடகங்களுக்கென எழுதத் தொடங்கியது பாடசாலை உயர்தரம் கற்கும் காலப்பகுதியில்தான். அந்த வயதில் அப்படித்தான் இல்லையா? எல்லோரையும் போல பரீட்சைக்காகக் கற்பதின் உள நெருக்கடியைத் தவிர்க்கவென புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினேன். அந்தக் காலத்தில் இப்போது போல நேரத்தைச் செலவழிக்க கைபேசிகளோ, சமூக வலைத்தளங்களோ எதுவும் இருக்கவில்லை. எனவே நிறைய வாசிக்க நேரம் கிடைக்கும். வாசிப்பவை எழுதத் தூண்டும். எனக்கும் அது அப்படித்தான் ஆயிற்று. பிறகு 'தம்பி, இலக்கியம் ஒரு காலத்திலும் வாழ்க்கைக்கு உதவாது. எதிர்கால வாழ்க்கைக்கு ஒரு நல்ல அத்திரவாரத்தை இட்டதன் பின்னர் எழுதுவதுதான், அனுபவங்களின் முதிர்ச்சியுடனான சிறப்பாக எழுத்தாக அமையும். எனவே முதலில் கற்றலில் கவனத்தைச் செலுத்துங்கள்' என எனது சகோதரி, கவிஞர் ஃபஹீமா ஜஹானிடமிருந்து தக்க சமயத்தில் நல்ல அறிவுரை கிடைத்தது. தொடர்ந்து பல்கலைக்கழகக் கல்வியையும் பூரணப்படுத்தி, தொழிலொன்றும் கிடைத்த பின்னரே மீண்டும் அச்சு இதழ்களில் எழுத ஆரம்பித்தேன். இடைப்பட்ட காலத்தில் எப்போதையும் போல புத்தக வாசிப்பை தொடர்ந்து கொண்டேயிருந்தேன். இவற்றை இங்கே குறிப்பிட இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

     ஒன்று, இக் காலத்தில் சமூக வலைத்தளங்களில், பதின்பருவ இளைஞர்களால் தமது பாடசாலைக் காலத்தில் எழுதப்படும் அரைகுறை எழுத்துக்கள் பலவற்றைக் காணக் கிடைக்கிறது. அவரின் அறிவுரை இப்போது தமது பாடசாலைக் காலத்தில் எழுதி வரும் பலருக்கும் கூட நிச்சயம் பயன்படும். அடுத்தது, நான் மிகவும் மதிக்கும் 'எங்கள் தேசம்' பத்திரிகையின் மூலமாகவே எனது அடுத்த எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பித்தமை. 'எங்கள் தேசம்' பத்திரிகையில்தான் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். அதனாலேயே நீங்கள் நேர்காணலுக்காக அணுகியபோது எனக்கு மறுக்கத் தோன்றவில்லை. 'ஊடகங்களின் நேர்காணல் என்றால் ஓடி மறைந்து கொள்பவன்' என்ற 'நல்ல' பெயர் ஊடக வட்டாரத்தில் எனக்கு உண்டு.


02.    
இளம் வயதிலேயே எழுத்துலகில் கவனிக்கப்படக் கூடிய ஒருவராக உங்களை மாற்றியிருக்கிறீர்களே. அதன் தீவிரத்தன்மை என்ன?
     தீவிரத் தன்மை என குறிப்பிட முடியாது. அது இயல்பாக அமைந்தது. ஒரு பொழுதுபோக்காக, இணையத்தில் எனக்கென வலைத்தளம் உருவாக்கி, ஆரம்பத்தில் 'எங்கள் தேசம்' பத்திரிகையில் எழுதிய கவிதை, சிறுகதை, கட்டுரைகளை, பதிந்து வரத் தொடங்கினேன். அவை சர்வதேசம் முழுவதிலுமிருந்தும் நிறைய வாசகர்களை உருவாக்கித் தந்தன. அவற்றில் கவிதைகளை, இந்திய 'காலச்சுவடு' பதிப்பகம், எனது அனுமதியோடு 'வீழ்தலின் நிழல்' எனும் தலைப்பில் தொகுப்பாகக் கொண்டு வந்தது. அது இப்போது இரண்டு பதிப்புக்களைத் தாண்டி விட்டன. என்னைப் பொறுத்தவரையில், எனது கவிதைகளைப் பொறுத்தவரையில் கவிதைகள் எனப் படுபவை சுய அனுபவப் பதிவுகள் மாத்திரமே. அதற்கீடான அனுபவங்களைக் கொண்டவர்கள் அவற்றை வாசிக்கும்போது, தம்மை அவற்றில் உணர்கின்றனர். இலங்கையைத் தாண்டி, தமிழ் வாசகர்களைக் கொண்ட ஏனைய நாடுகளின் காத்திரமான இணைய, அச்சு ஊடகங்கள் தமது இதழ்களுக்கான படைப்புகளுக்காக என்னை அணுகியபோது என்னால் கொடுக்க முடிந்தது. அவ்வாறான வேண்டுகோள்கள், எனக்குள்ளும் ஏதோ இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி பெரிதும் ஊக்கத்தைத் தந்து தொடர்ந்தும் எழுதச் செய்தன. அதுதான் இப்போதும் என்னை இயங்கச் செய்கிறது. நல்ல படைப்புக்களை மாத்திரம் வெளியிடும், காத்திரமான இதழ்களில் படைப்புக்கள் வெளிவந்ததால் நான் கவனிக்கப்படக் கூடிய ஒருவனாக ஆகியிருக்கிறேன். இவ்வாறான இதழ்களில் படைப்புக்களை வெளியிடாமலேயே சிறப்பாக எழுதும், நல்ல படைப்பாளிகள் பலர் இலங்கையில் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள்.


03.    
நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றி குறிப்பிடுங்கள்?

1. '
வீழ்தலின் நிழல்' (கவிதைத் தொகுப்பு, காலச்சுவடு பதிப்பகம்)
2. '
அம்மாவின் ரகசியம்' (மொழிபெயர்ப்பு நாவல், காலச்சுவடு பதிப்பகம்) - இந் நாவல், 2011 இல் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச சாகித்திய இலக்கிய விருதினையும், பணப்பரிசினையும் வென்றது.
3. '
தலைப்பற்ற தாய்நிலம்' (மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு, எழுநா - நிகரி பதிப்பக வெளியீடு) - கவிஞர் ஃபஹீமாஜஹானுடன் இணைந்து மொழிபெயர்த்த, சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் சிங்களக் கவிதைகளின் மொழிபெயர்ப்புத் தொகுப்பு.
4. '
கறுப்பு ஜூன் 2014' - இலங்கை முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும்!

     இன்னும் ஆபிரிக்க உலகச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு முழுத் தொகுப்பு, ஏழு சிங்களக் கவிஞர்களின் கவிதைகளடங்கிய முழுத்தொகுப்பு, மொழிபெயர்ப்பு நாவல் ஒன்று மற்றும் எனது சிறுகதைத் தொகுப்பு என இவ் வருடம் எனது நான்கு தொகுப்புகள் வெளிவரத் தயாராக உள்ளன. இன்னும் பதிப்பகத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனது ஏனைய தொகுப்புகள் அனைத்துமே பிற நாடுகளிலிருந்து வெளிவந்ததால் இத் தொகுப்புக்களை இலங்கை பதிப்பகங்களினூடாக வெளியிட உத்தேசித்திருக்கிறேன்.


04.    
நீங்கள் மொழிபெயர்ப்புத் துறையில் அதிக ஈடுபாடுகொண்டவர் என்பதை யாவரும் அறிந்ததே. உங்களுடைய மொழிபெயர்ப்பு ஈடுபாடுகள் குறித்து?
     எழுத வர முன்பிருந்தே சிங்கள, ஆங்கில நூல்களை வாசிப்பேன். பிற மொழி நூல்களை வாசிக்கும்போது, என்னை மிகவும் ஈர்த்த கவிதையை, சிறுகதையை, கட்டுரையை சகோதரி ஃபஹீமாஜஹானோடு பகிர்ந்து கொள்வேன். அதைப் பற்றி இருவரும் கலந்துரையாடுவோம். அவரும் அவ்வாறுதான். தமிழ் வாசக உலகுக்கு வராத, அற்புதமான சிங்களப் படைப்புக்கள் பல உள்ளன. சிங்களம் எனும் மொழி, இலங்கைத் தீவுக்கு மாத்திரமே உரித்தான பிரத்தியேகமான, சிறந்த அழகான மொழி. அதிலுள்ள நல்ல பல படைப்பாளிகள், சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்து வந்தவர்கள். எனவே அவர்களது அனுபவப் பிரதியீடுகளுடனான படைப்புகள் மிகவும் சிறந்து விளங்குகின்றன. ஒரு நல்ல படைப்பை, திரைப்படத்தை, கலையை நீங்கள் காண நேரும்போது, அதைப் பற்றி உங்கள் நண்பரிடத்தில் கதைப்பீர்கள் இல்லையா? அப்படித்தான், தமிழ் வாசகர்களிடத்தில் அவ்வாறான நல்ல படைப்புகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உந்தவே, மொழிபெயர்க்க ஆரம்பித்தோம்.


05.    
இன்றைய கால இலக்கியவாதிகளிடையேயும் ஒருவித அரசியல் போக்கு காணப்படுகின்றதே. அது ஆரோக்கியமானதா? அது பற்றிய உங்களுடைய அபிப்பிராயம்?
     உண்மையான, தமது திறமையை மாத்திரம் நம்பி எழுதியும், இயங்கியும் வரும் இலக்கியவாதிகளிடையே இவ்வாறான அரசியல்போக்கு ஏற்படச் சாத்தியமில்லை. இலக்கியவாதிகள் எனத் தம்மைச் சொல்லிக் கொள்ளும் போலிகள், கவன ஈர்ப்புக்காகவும், பிரபல்யத்துக்காகவும் இலக்கியத்தில் அரசியல்போக்கை நுழைத்திருக்கிறார்கள். இது இலக்கியத்துக்கு நிச்சயமாக ஆரோக்கியமானதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. வாசகர்களிடையே தமது எழுத்து பேசப்பட வேண்டும் என்பதற்காக ஆபாசத்தை வலியத் திணித்து எழுதும் போக்கு, அப்போது எழுத வந்த சிலரிடம் காணப்பட்டது. அதை எல்லோரும் பின்பற்றப் போய், தமிழ் இலக்கியம் என்றாலே ஆபாச இலக்கியம் என பிற மொழியில் எழுதுபவர்கள் கருதும் அளவுக்கு கொண்டு வந்து விட்டார்கள். இப்போது அடுத்ததைத் தொடங்கியிருக்கிறார்கள். தமக்குப் பிடித்த எழுத்தாளர் ஒருவரைப் பிடித்துக் கொண்டு, அவரை உதாரணமாக வைத்துக் கொண்டு ஏனைய எழுத்தாளர்களை கேலி செய்யும் போக்கு, இப்போதைய இளம் தலைமுறை எழுத்தாளர்களைப் பிடித்துக் கொண்டு ஆட்டுகிறது. இதில் இரண்டு சாராருக்கும் ஏற்படும் சண்டைகளை சமூக வலைத் தளங்களில் நேரடியாகக் காணக் கூடியதாக இருக்கிறது. தம்மால் பிறர் சண்டையிட்டு அடித்துக் கொள்கிறார்களே என்ற பதைபதைப்பு துளியும் இன்றி, அரசியல்வாதிகள் தமது அடிமை குண்டர்களை ஏவி விடுவதைப் போல, இந்தப் பிரதான எழுத்தாளர்களும் இளைஞர்களை உசுப்பேற்றி விடுவதையே செய்துவருகிறார்கள். அவர்கள் செய்வதைச் செய்யட்டும். நமது இளம் தலைமுறையினருக்கு புத்தி எங்கே போய்விட்டது? போலி இலக்கியவாதிகளுக்காக தமது நேரத்தை வீணடித்து, ஆளுக்காள் சண்டை பிடித்துக் கொள்ளும் இளைஞர்கள் தமது குடும்பத்துக்காக, தமது எதிர்காலத்துக்காக அந் நேரத்தைச் செலவிடுவது மாத்திரமே அந்த இளைஞர்களுக்கு பயனுள்ளதாக அமையும். இலக்கியத்தை எவரும் போரிட்டுப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. திறமையுள்ளவர்களால், இலக்கியமானது என்றும் அழியாது அதன் பாட்டில் வாழ்ந்து கொண்டேயிருக்கும்.

*********
 நன்றி - திரு.நஸார் இஜாஸ், 'எங்கள் தேசம்' இதழ்